Tuesday, 29 March 2011

மகரந்த சேர்க்கையில்

புதைந்து கிடக்கும்

ஒரு புதிய

வரவிற்கான விருட்சம்.



தேனீக்களின் சத்தத்தில்

உருவாகின்றது

பல ஆயிரம் சந்ததிகளின்

வம்சத்திற்கான வரவுகள்.



பச்சைக் கிளிகள்

பழம் கொத்தும் சத்தத்தில்

பறந்து செல்கிறது

குருவிகூட்டின் பிஞ்சுகள்.



அடைகாத்தலின் வெம்மையில்

உடைந்து கிடக்கிறது

கோழிக் குஞ்சுகளின் ஓடுகள்.



விழுந்து கிடக்கும்

கன்றின் ஈரத்தில்

சுரந்து கொண்டிருக்கிறது

பசுவின் பால்.



உன்னில் என்னை

தொலைத்துவிட்டதில்

எஞ்சிக் கிடக்கிறது.....


நம் குழந்தையின்

அழுகைக்கான  சத்தம். 
















Saturday, 26 March 2011

அங்கும் இங்கும்

ஒரு திருமண வைபவத்தில்

உன்னைப் பார்த்தேன்.



மின்மினிப் பூச்சிகள்

ஒன்று சேர்ந்து

மின்னலை விரட்டுவது போல இருந்தது

உன் இமைகள் துடித்த அழகு.



செம்பருத்தி பூவின்

இதழாய் இருந்தது

உன் உதட்டில் தெறித்து விழுந்த

புன்னகையின் சிதறல்கள்.



வசந்த கால காற்றில் அசையும்

அரசமர இலைகளைப்  போல

கலைந்து பறக்கிறது

உன் தலைமுடி

சுழலும் மின்விசிறியில்.



கால் பந்தாட்ட வீரர்கள்

பந்தை நோக்கி

அங்கும் இங்கும் ஓடுவதைப் போல

ஓடிக்கொண்டிருக்கிறாய் நீ

உன் கால்களின்

கொலுசுச் சத்தம் ஒலித்தபடி.




 பெயர் கேட்கலாம் என்று

உன் அருகே வரும் வேளையில்

ஓடிச் சென்று

அமர்ந்து கொண்டாய்

உன் அம்மாவின் மடியில்.




என் மகளாக

இருந்திருக்கக்கூடாதா

நீ ...




Friday, 25 March 2011

பயணம்

அவரவர்களுக்கான பாடலை

அவரவர்களுக்கான செல்போனில்

கேட்டபடி

பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.


பேருந்திலும் 

ஒலித்துகொண்டிருக்கிறது பாடல்.


ஒருவேளை அது

அவர்களுக்கான பாடலாகவும்  

இருக்கக் கூடும்.

Wednesday, 23 March 2011

நிலவின் நிழலில்

ஒரு கோடை கால இரவில்

நிலவின் நிழலில்

நாம் ஒன்றாக

அமர்ந்திருந்தோம்.



 
நெடிந்து ஓங்கி வளர்ந்த

பனைமர இலையின்

விலிம்பை கிழித்துகொண்டு

வந்து விழும்

நிலவின் முகத்தை

சாட்சியாய் வைத்துக்கொண்டு

என் விரல்களை லேசாக

வருடியபடி இருந்தாய் நீ.



இறுக்கத்தின் புழுக்கத்தில்

வழிந்து வந்த

வியர்வையின் வாசம்

தென்னங்கீற்றுகளின் ஓசையில் 

ஒளிந்துகொண்டு அசைகையில்

என் கைகளை

இறுகப் பற்றிகொண்டிருந்தாய் நீ.



 
அனைவரும் தூங்கிவிட்டார்கள்

என்பதை

நாய்களின் மௌனம்

உணர்த்திய வேளையில்

என் மடி மீது

தலை வைத்து

படுக்க ஆரம்பித்தாய் நீ.



 
என் விரல்கள்

உன் தலை முடியை

கோதி விடும் வேளையில்

உடைந்து போன

என் நகத்தின் இடுக்கில் மாட்டியதால்

உண்டான ஓசையில்

கலைந்து போனது

நம் விடியலுக்கான வெளிச்சம்.



 
பேசாமல் இருந்திருக்கலாமோ

என்கிற வேளையில்

ஊர் கூடிப் பேசிற்று

நம்மைப் பற்றியும்

நம்மில் உண்டான

உறவு பற்றியும்.



 
இப்போதும்

வந்து போகிறது

கோடை கால  நிலா.


 

நீ தான் இல்லை

என்னோடு..........




Tuesday, 22 March 2011

எனக்கான நாட்கள்.

ஒரு அதிகாலைப் பொழுது புலர்வதில் ஆரம்பமாகிறது

உன் முகம் காணும் தரிசனத்திற்கான ஆவல்.

நினைவுகளின் சுழற்சியில்

பின்னோக்கி நகர்கிறது எனக்கான நாட்கள்.


நீ நடந்து வந்த பாதையின் ஒலிகளில் 

புதைந்து கொண்டது 

என் கால்களின் பெருவிரல் ரேகைகள்.



உன் விழிகளின் மௌனத்தில்

மறைந்து கொண்டது என்    

பார்வைக்கான  அர்த்தங்கள்.



 
நீ சூடி வந்த பூக்களின் வாசத்தில்

தொலைந்து போனது என் 

சுவாசத்தின் வாசங்கள்.



 
ஒரு பேருந்து பயணத்தின் போது

கூட்ட நெரிசலின் நடுவே 

என்னிடம் நீ கொடுத்த புத்தகத்தின் 

கிழிந்து போன பக்கத்தின் துண்டுச் சீட்டு 

இன்னமும்  ஒட்டப்பட்டுள்ளது

என் இதயத்தின் ஓரமாய்.



 

இத்தனைக்கு நடுவிலும் என்னை  

கடந்து போகிறாய் நீ

எதுவும் தெரியாமல்.




 
சொல்லாமல் போன என் காதல்

கசங்கிக்  கிடக்கிறது 

முடிந்து போன உன்

திருமண அழைப்பிதழில்.




Monday, 21 March 2011

அப்பாவின் தம்பிகள்

அடிக்கடி வந்து போவார்கள்

அப்பாவின் தம்பிகள் .


 
அவர்களின் வருகை கண்டதும்

வண்ணத்து பூச்சியின் படபடப்பு

அப்பாவின் கண்களில் காணக் கிடைக்கும் .


 
குழந்தைகள் ஒன்று கூடி

கும்மாளமிடும் மகிழ்ச்சியை போன்று

அப்பா தம்பிகளுடன் பேசி 

தனக்கான உலகத்தில் லயித்திருப்பார் .


 
பந்தை பார்க்காமலே எம்பிக் குதிக்கும் 

கிரிக்கெட் ரசிகனைப் போல 

சில சமயங்களில்-

சந்தோஷ தருணங்கள் விண்ணைப் பிளக்கும் .


 
ஏன்? எதற்கு? என்று கேட்காமலேயே

வாரி வழங்கும் அப்பாவின் குணம்

எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்-

அம்மாவைத் தவிர .


 
மனம் கோணும் அம்மாவின் முணுமுணுப்பில்  

அப்பாவின் வார்த்தைகள் தணலாய் தெறித்து விழும்.

எனக்குப் பிறகு 

என் தம்பிகள் பார்த்துக்கொள்வார்கள்.


 

இப்போதும் வந்து போகிறார்கள்

அடிக்கடி

அப்பாவின் தம்பிகள்.

மிச்சமிருக்கும் பணத்திற்கும்

சொச்சமிருக்கும்  நிலத்திற்கும்.



 
வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அம்மா

அப்பாவின் நினைவுகளோடு .............

Friday, 18 March 2011

நீயும் நானும்

இப்படித்தான் இருந்தது நம்மில் உண்டான உறவு .

நிலவு பூமிக்கு நெருங்கி வருவதனால்

உண்டாகும் பயத்தைப் போல

அணு உலை சிதறி வெளியிடும் கதிர் வீச்சை

சுவாசிக்க பிடிக்காமல்அரண்டு ஓடுவதைப்  போல

பூமி அதிர்வில் மிரண்டு  சுனாமியின்

கோரத்தில் சிக்கி தவிப்பதைப் போல

முடிந்து போன கோரத்தில்

முகம் காணத் துடிப்பதைப் போல

இப்படித்தான் இருந்தது நம்மில் உண்டான உறவு .

ஆனாலும் ,

அடிக்கடி வந்து தொலைகிறது ஒரு  பயம்

நீயும் நானும் ஒன்று சேர்ந்து விடுவோமா என்று .

Thursday, 17 March 2011

முத்தம்

அழுத்தமாய் நெற்றியில் ஒரு முத்தம் 

அப்படியே இரு கண்களின் மேலும்

குழி விழும் இரு கன்னங்களிலும்

செக்கச்சிவந்த உதட்டோடும்

மாறி மாறி இட்டுக்கொண்டிருந்தேன் முத்தம்...


மார்பில் செல்லமாய் சிணுங்கிய என்

குழந்தைக்கு.

Wednesday, 16 March 2011

மகள்

எனக்கும் என் மகளுக்கும் உள்ள உறவு

எனக்கும் என் அம்மாவிற்கும்  உள்ள  உறவு போன்றது .

நான் கருவில் என் அம்மாவை எட்டி உதைத்தேன்

இன்று என் மகள்

என் மனைவி கருவில் இருந்து வந்தவுடன் என்னை உதைக்கிறாள் .