Monday, 21 March 2011

அப்பாவின் தம்பிகள்

அடிக்கடி வந்து போவார்கள்

அப்பாவின் தம்பிகள் .


 
அவர்களின் வருகை கண்டதும்

வண்ணத்து பூச்சியின் படபடப்பு

அப்பாவின் கண்களில் காணக் கிடைக்கும் .


 
குழந்தைகள் ஒன்று கூடி

கும்மாளமிடும் மகிழ்ச்சியை போன்று

அப்பா தம்பிகளுடன் பேசி 

தனக்கான உலகத்தில் லயித்திருப்பார் .


 
பந்தை பார்க்காமலே எம்பிக் குதிக்கும் 

கிரிக்கெட் ரசிகனைப் போல 

சில சமயங்களில்-

சந்தோஷ தருணங்கள் விண்ணைப் பிளக்கும் .


 
ஏன்? எதற்கு? என்று கேட்காமலேயே

வாரி வழங்கும் அப்பாவின் குணம்

எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்-

அம்மாவைத் தவிர .


 
மனம் கோணும் அம்மாவின் முணுமுணுப்பில்  

அப்பாவின் வார்த்தைகள் தணலாய் தெறித்து விழும்.

எனக்குப் பிறகு 

என் தம்பிகள் பார்த்துக்கொள்வார்கள்.


 

இப்போதும் வந்து போகிறார்கள்

அடிக்கடி

அப்பாவின் தம்பிகள்.

மிச்சமிருக்கும் பணத்திற்கும்

சொச்சமிருக்கும்  நிலத்திற்கும்.



 
வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அம்மா

அப்பாவின் நினைவுகளோடு .............

1 comment:

  1. Ah this one which we read in our college.Nice sir and its a true one too....

    ReplyDelete