ஒரு கோடை கால இரவில்
நிலவின் நிழலில்
நாம் ஒன்றாக
அமர்ந்திருந்தோம்.
நெடிந்து ஓங்கி வளர்ந்த
பனைமர இலையின்
விலிம்பை கிழித்துகொண்டு
வந்து விழும்
நிலவின் முகத்தை
சாட்சியாய் வைத்துக்கொண்டு
என் விரல்களை லேசாக
வருடியபடி இருந்தாய் நீ.
இறுக்கத்தின் புழுக்கத்தில்
வழிந்து வந்த
வியர்வையின் வாசம்
தென்னங்கீற்றுகளின் ஓசையில்
ஒளிந்துகொண்டு அசைகையில்
என் கைகளை
இறுகப் பற்றிகொண்டிருந்தாய் நீ.
அனைவரும் தூங்கிவிட்டார்கள்
என்பதை
நாய்களின் மௌனம்
உணர்த்திய வேளையில்
என் மடி மீது
தலை வைத்து
படுக்க ஆரம்பித்தாய் நீ.
என் விரல்கள்
உன் தலை முடியை
கோதி விடும் வேளையில்
உடைந்து போன
என் நகத்தின் இடுக்கில் மாட்டியதால்
உண்டான ஓசையில்
கலைந்து போனது
நம் விடியலுக்கான வெளிச்சம்.
பேசாமல் இருந்திருக்கலாமோ
என்கிற வேளையில்
ஊர் கூடிப் பேசிற்று
நம்மைப் பற்றியும்
நம்மில் உண்டான
உறவு பற்றியும்.
இப்போதும்
வந்து போகிறது
கோடை கால நிலா.
நீ தான் இல்லை
என்னோடு..........
No comments:
Post a Comment