ஒரு மழைக்கால இரவில்
குளிரில் நடுங்கிய
என் குழந்தையை
நெஞ்சோடு
அணைத்த போது
வந்தது
அப்பாவின் நினைவுகள்.........
எப்போதுமே எங்களை
தோளுக்கு மேல் தான்
தூக்கி வைத்திருப்பார் அப்பா
அவர் முதுகுக்கு பின்னால்
மறைந்திருக்கும் உலகத்தை
முழுசாய் நாங்கள் பார்ப்பதற்கு .....
எங்களின்
இரவு நேர வியர்வைகள்
அப்பா தன் கரங்களால்
நெடுநேரம் விசிறிய
பனைஒலையின் கைப்பிடியில்
காய்ந்து கிடக்கிறது .....
வாழ்க்கையில்
நாங்கள் முன்னோக்கி நடந்தோம்
அப்பா பின்னோக்கி நடந்தார்
காரணம் கேட்டால்
நீங்கள் முன்னால் செல்வதை
பார்த்து மகிழ- நான்
பின்னால் இருப்பதே நலம் என்பார் .....
அட்சயப் பாத்திரமாய் இருக்கும்
சட்டை பையில்
அள்ள அள்ள
குறையாமல் இன்றுவரை
வந்துகொண்டே இருக்கிறது
"அப்பாவின் அன்பு "
எல்லா அப்பாக்களும்
நல்ல அப்பாக்கலாவென்று
எங்களுக்கு தெரியாது.....
ஆனால்
எங்கள் அப்பா
அம்மாவாகவும் இருந்தார் ..
மணி விழா அன்று
அப்பாவின் கைகளை
கண்களில் ஒற்றிய போது
காணாமல் போய் இருந்தது
கைகளின் ரேகைகள்
உற்று நோக்கினோம் ...
.
அப்பா சொன்னார்..................
இத்தனை ஆண்டுகள்
என் கைகளை விடாமல்
இறுக பற்றி நடந்தீர்கள்
அதனால்
என் கைகளின் ரேகைகள்
உங்கள் கைகளில்
ஒட்டிக்கொண்டது
அவர்தான் எங்கள் அப்பா .......